C. N. Annadurai
'சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே குழைந்து கிடக்கிறது. வீர உரையாற்றி, வெற்றி முழக்கமிட்டு, பிடிபட்ட மன்னர்களை விரட்டிப் பேசிய, அவனுடைய வாயிலே இரத்தம்! புகழ் மாலை தாங்கிய உடலிலே, புண்! சாளுக்கிய நாடே! தீயிட்டனர் உனக்கு! தீய்ந்தது உன் எழில்! செல்வம் கருகி விட்டது. புகழ் புகைந்து போயிற்று. மாடமாளிகைகளிலே நெருப்பு! மண்டபங்களெல்லாம் மண்மேடுகளாயின. அழிந்தது கோட்டை. மிகுந்தது என்ன? எதிரியிட்ட தீ, தன் பசி தீர சாளுக்கிய நாட்டைத் தின்று தீர்த்தான பிறகு, மிச்சமானது என்ன? சாம்பல்! ஆம்! சாளுக்கிய நாட்டின் கதி இதுவாயிற்று. பிடி சாம்பல்! முடிவிலோர் பிடி சாம்பல்!'சாளுக்கிய நாட்டின் மீது, பல்லவன் நரசிம்மன் போர் தொடுத்தான் - போரென்றால், மிகப் பயங்கரமானது; வரலாற்றிலே மிகமிகக் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்.வாதாபி, சாளுக்கியத்தின் தலைநகரம் - எழில்மிக்க இடம். பல்லவப்படை, அந்த அழகு நகரை, அடியோடு அழித்து விட்டது. வாதாபியின் அழிவுபோல், வேறெந்தப் போரிலும், வேறெந்த நகருக்கும் அழிவு நேரிட்டதில்லை என்று கூறுவர் - அவ்வளவு பயங்கரமான அழிவு. சாளுக்கியனின் படைகள், சண்ட மாருதத்தில் சிக்கிய கலம் சுக்கு நூறாவது போல, சின்னா பின்னமாயிற்று. ஊர், உருத் தெரியாது அழிந்தது. மன்னனும் களத்திலே பிணமானான். பல்லவப் படையின் தாக்குதலால், சாளுக்கிய சாம்ராஜ்யமே படுசூரணமாகி விட்டது.