Annadurai
'லாரோகேல், கோட்டைக் கோமகள், கோமளவல்லி இளமையும் எழிலும் ததும்பும் இன்பவல்லி... தெரியுமே, மன்னா! தங்கட்கு... நினைவில்லையோ?''அவளா அமைச்சரே! அழகி, ஆமாம், நினைவிலிருக்கிறது - எவர் நெஞ்சிலும் பதியும் ஓவியம்! விதவை, அல்லவா?''ஆமாம் அரசே! விதவை! விருந்தாக வேண்டியவள்.''கோலாகல வாழ்க்கையை வெறுப்பவள் போலும் அந்த வனிதாமணி. நமது கொலுமண்டபத்துக்கு வரத் தயங்கும் காரணம், வேறென்னவாக இருக்கமுடியும்.''விழிமட்டுமல்ல, மன்னா! மங்கையின் சுபாவமே மானுக்குள்ளது போன்றதே. ஒருவகையான கூச்சம்! அத்தகு ஆரணங்குகளிடம், பழகிவிட்டால், தொட்டால் துவள்வதுஅவளிடம் கிடைக்கொணாத இன்பம் பிறக்கும். அவள் தங்கள் அவைக்குத் தேவையான உயிரோவியம். இந்த இடத்தின் அழகு, அவளால் வளரும், மிளிரும். பூந்தோட்டத்தில் தானே பூபதி! புள்ளிக்கலாப மயில் தோகையை விரித்தாடிட வேண்டும், பொட்டலிலா! லாராகேல் கோட்டையின் ரமணி, தங்கள் பார்வையில் இருக்க வேண்டிய பாவை. மேலும், இங்கு இளித்துக் கிடக்கும் நங்கைகள் தங்கள் மனத்திலே ஓர் சோர்வை உண்டாக்கி விட்டனர். உணர்கிறேன் மன்னா, உணர்கிறேன். அந்த உல்லாசி இங்கு உலவினாலே போதும், தென்றலின் இனிமை கிடைக்கும்.''அமைச்சரே! அவள்தான் இங்கு வர மறுக்கிறாளே''மறுத்தால் என்ன! அவள் இங்கு வராவிட்டால் நாம் அங்குப் போவது!''நாமா''ஆமாம்! இப்படி அல்ல; மாறுவேடத்தில்...''வேடிக்கையாக இருக்கும்.''மனத்துக்குப் புதுவிதமான இன்பம் இறையே.''எனக்குக்கூட ஒரே சலிப்புத்தான்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கீதங்கள்! கண்டு கண்டு சலித்துப்போன நடனங்கள்! ஒய்யாரிகளின் சிரிப்பு, காதைக் குடைகிறது,